Wednesday, July 21, 2010

புகை


ஒரு ஏர்போர்ட்டில் நின்று கொண்டு ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த ஒரு மனிதன், புகை பிடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரிடம் சென்று, “ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை முறை புகை பிடிப்பீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், ”எதற்காக கேட்கிறீர்கள்?” என்றார்.

“இதுநாள் வரை, புகை பிடிப்பதற்காக நீங்கள் செலவழித்த பணத்தை சேமித்து வைத்திருந்தீர்களானால், எதிரே நிற்கும் இந்த விமானத்தையே இன்று நீங்கள் சொந்தமாக விலைக்கு வாங்கியிருக்கலாம். அதற்காகத்தான் கேட்டேன்.” என்றார்.

உடனே அந்த மனிதர், “அப்படியானால் அந்த விமானம் உங்களுக்கு சொந்தமானதா?”

“இல்லை.”

“உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி! ஆனால், அந்த விமானம் இப்பொழுது கூட எனக்கு சொந்தமானதுதான்.” என்றார் அந்த புகை பிடிப்பவர்.

Monday, July 19, 2010

கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு நீண்ட நாட்களாக பதில் அளிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.

முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது.இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும்.அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது.

வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்!

இன்டெர்நெட்டை யார் கண்டுபிடித்தார்கள்??

உலகை ஆளும் 'இன்டெர்நெட்'டை உருவாக்கியவர் ஒரே ஒரு மனிதர் அல்ல. அது பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தது, படிப்படியாக வளர்ந்து, www (world wide web) என்ற நிலையை அடைந்துள்ளது.

முதன் முதலாக 1961-ல் இதனை உருவாக்கியவர் லியோநார்டு க்ளெய்ன்ராக் (Leonard Kleinrock) என்பவர். 1962-ல் ஜெ.சி.ஆர். லிக்லிடெர் என்பவர், லியேநார்டுடன் இணைந்து புது வலைதள ஐடியாவை உருவாக்கி, ARPANET என்று பெயரிட்டார். 1968-ல் 'நெட்வொர்க் வொர்க்கிங் குரூப்' என்ற நிறுவனம் இதனை இன்னும் நெறிப்படுத்தியது. 1969-ல் 'யு.சி.எல்.ஏ.' என்ற நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இன்டெர்நெட்டை அறிமுகப்படுத்தியது

காதலுக்கு ஒரு இணைய தளம்

இணையவாசிகளே காதலுக்கு கைகொடுப்பீர் எனும் வேண்டுகோளோடு அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது இணைய வழி காதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். விஸ்கான்சின் நகரைச் சேர்ந்த பிரைன் எனும் அந்த வாலிபர் இதற்காக இணையதளம் ஒன்றை அமைத்து இணையவாசிகளின் காதல் யோசனைகளை கேட்டிருக்கிறார்.
வரும் 19ம் தேதி துவங்க உள்ள இந்த காதல் பயணத்தில் அவர் சந்திக்க இருக்கும் இளம்பெண்களை இணையத்தின் மூலமே தேடி பிடிக்க உள்ளார். அவர்களோடு எப்படி பழகுவது? என்ன பேசுவது? என்பதை இணையவாசிகளை கேட்டே அவர் மேற்கொள்ள இருக்கிறார்.
திரைப்பட உலகில் சோதனை முயற்சி என்பது போல காதலில் ஒரு சோதனை முயற்சி என்று எடுத்துக்கொள்ளலாம். காதலின் தன்மையை சோதிப்பதற்கான முயற்சி என்பதை விட இணையத்தின் ஆற்றலை சோதித்து பார்ப்பதற்கான முயற்சி என்று வைத்துக்கொள்ளலாம்.
தற்போது இணையத்தில் பிரபலமான கோட்பாடுகளில் ஒன்றாக இருக்கும் “கிரவுட் சோர்ஸிங்’கில் ஒரு அங்கமாக பிரைனின் முயற்சியை கருதலாம். இன்டர்நெட் மூலம் இணையவாசிகளை ஒருங்கிணைத்து அவர்களின் பங்களிப்போடு குறிப்பிட்ட ஒரு செயலை நிறைவேற்றுவதை கிரவுட் சோர்ஸிங் என்று சொல்கின்றனர். சிறந்த வடிவமைப்பை உருவாக்குவது உள்பட பல விஷயங்களுக்கு இந்த கொள்கை பயன்படுத்தப்படுகிறது.
அடிப்படையில் கூச்ச சுபாவம் கொண்டவர் என்று வர்ணித்துக்கொள்ளும் பிரைன் காதலுக்காக இந்த கோட்பாட்டை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கிறார். நியூயார்க் நகரில் பிரம்மச்சாரிகளோ பாதிக்கு பாதி இருக்கும் நிலையில் நகருக்கு புதிதாக குடியேறிய தான் மனதுக்கு பிடித்தமான இளம் பெண்ணை டேட்டிங் செய்ய தேர்வு செய்வது கடினத்திலும் கடினம் என்று கூறும் பிரைன் இதற்காக இணையவாசிகளின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளார்.
காதலுக்காக “டேட்டிங் பிரைன்’ எனும் இணையதளத்தை அவர் அமைத்திருக்கிறார். தன்னைப் பற்றியும், தனது நோக்கம் பற்றியும் ரத்தின சுருக்கமாக கூறியுள்ள அவர், காதல் பயணத்தில் ஆலோசனைகளை இணையவாசிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நண்பர்கள் காதல் கைக்கூட ஆலோசனைகளை வழங்குவதுபோல இணையவாசிகள் இவருக்கான காதல் டிப்ஸ்களை சமர்ப்பிக்கலாம். அதற்காகத்தான் கட்டளையிடுங்கள் தலைவா என்பது போல அவர் காத்திருக்கிறார். 19ம் தேதி துவங்கி ஒரு மாத காலத்திற்கு அவரது டேட்டிங் பயணம் நிகழ உள்ளது.
இந்த பயணத்தின் வழிதுணையாக வரக்கூடிய காதலிகளையும் அவர் இணையம் மூலமே தேர்ந்தெடுக்க உள்ளார். இவரது கோரிக்கையை ஏற்கும் இளம்பெண்கள் இந்த தளத்தின் மூலம் அவரோடு டேட்டிங் செய்வதற்கான விருப்பத்தை தெரிவிக்கலாம். அழகான இளம்பெண்களை அறிந்தவர்கள் இந்த தளத்தின் மூலமே பிரைனுக்கு அவர்களை அறிமுகம் செய்துவைக்கலாம்.
இந்த பெண்களோடு அவர் பழகும் விதத்தை இணையவாசிகளின் அறிவுரைகளும் ஆலோசனைகளுமே தீர்மானிக்க உள்ளன என்பதால் இந்த இணைய காதல் பயணம் எங்கே சென்று எப்படி முடிகிறது என்பதை நாமும் ஆர்வத்தோடு பின்தொடரலாம்.
பிரைனின் காதல் முகவரி:http://ht.ly/2aeb0

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.

இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். இதனால், தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்

மனநோய் ஒரு சமூக வியாதியா???????/

மனநோய் ஒரு சமூக வியாதி. ஆடையை கிழித்துக் கொண்டு அலைபவர்கள் மட்டும் மனநோயாளிகள் அல்ல. ஆசைகள் நிறைவேறாதவர்கள், விருப்பங்களை அடக்கிக் கொண்டவர்கள், அடக்கபடுபவர்கள் என எல்லோரும் எப்போதாவது மனநோய் அறிகுறிகளை வெளிபடுத்துவார்கள்.

சமுதாயத்தில் ஏற்ற இறக்கங்கள் பின்பற்றப்படும்வரை மனவியாதிகள் இருக்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உளவியலின் தந்தையாக போற்றபடும் சிக்மட் பிராய்டு, `பண்பாட்டு உணர்ச்சியால் (பாலின) உணர்வை கட்டுபடுத்துவதும் மனநோய் பாதிப்புக்கு காரணம்’ என்று கூறினார். மனிதன் ஒரு இன்பம் விரும்பி. அவனுக்கு துன்பம் பிடிக்காது. ஆனால் இன்பமும் துன்பமும் மனதால் வருகிறது என்பதை உணராதபோது அவன் சுயநிலை இழக்கிறான். உளவியல் பாதிப்பு வெளிபடத் தொடங்குகிறது. மற்றவர்களால் மனநோயாளி என ஒதுக்கபடுகிறான். உடல் திடகாத்திரமாக இருந்தும் மனம் திடமாக இல்லாவிட்டால் அவனை சமுகம் மனிதனாகக் கருதாது.

மனவியாதியும் மற்ற வியாதிகள்போல குணபடுத்தக் கூடியதே. ஆனால் சமுகம், பாதிக்கபட்டவருடன் அவரது குடும்பத்தையே ஒதுக் குவதால் யாரும் துணிந்து மனநல சிகிச்சையை முதலிலேயே நாடுவதில்லை. சிந்தனை, உணர்ச்சி, பண்பியல் இவற்றின் குறைபாடுகளே மன நோயின் அறிகுறிகளாகும். வழக்கத்துக்கு மாறாக பேசுவது, சொன்னதையே சொல்வது சிந்தனை குழப்ப அறிகுறிகளாகும். கல்வி அறிவிற்கும், கலாச்சாரத்திற்கும் பொருந்தாத முடநம்பிக்கை, அச்சம் காரணமாக எழும் தேவையற்ற பயம், நம்பிக்கை, இயல்பான உணர்வுகள் அடங்காமல் வெளி படுவது மனநோய் வெளிபாடுகளாகும்.கடவுள் தோன்றுவதாகவும், ஏதோ ஒலி கேட்பதாகவும், வாசனை வருவதாகவும், யாரோ தங்களை தொட்டுத் துன்புறுத்துவதாகவும் கூறுவதும் சில அறிகுறிகள் தாம். ஞாபகசக்தி குறைவதும், தூக்கம் குறைவதும் மன பாதிப்புகளின் வெளிபாடுகளே. அறிகுறிகளை சரியாக கவனிக்காவிட்டால் மனநோய் முதிர்கிறது. இதில் எண்ணம் தொடர்பான முதிர்ந்த மனநோய்கள் இருவகைபடும். அவை: முளை பாதிப்பது, முளை பாதிக்காத மனம் சார்ந்த பாதிப்பு.

இதன் முதல்கட்டமாக மனச் சிதைவு ஏற்படுகிறது. குழந்தைகளிடம் அதிக எதிர்பார்பை காட்டுவதால் குமர பருவ மனச்சிதைவு உண்டாகிறது. இளமையில் விரைப்பு சார்ந்த மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது. பகை, வெறுப்பு, அலட்சியம், அகம்பாவ எண்ணம் கொண்டவர்களுக்கு பின்னாளில் சந்தேகம் சார்ந்த மனச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மனநலக் குறைவு உடல் நோய்களையும் தோற்றுவிக்கும். ஏனெனில் மனமும், உடலும் இணைபுள்ளவை. உடலில் நோய் ஏற்பட்டால் கோபம், எரிச்சல், சோர்வு போன்ற மன பாதிப்புகள் வெளிபடும். அதுபோல மனஅதிர்ச்சி ஏற்படும்போது வியர்வை, நடுக்கம் போன்ற உடல்பாதிப்புகள் ஏற்படும்.

எனவே உளவியல் மாற்றங்களால் சில வியாதிகளும் தோன்றும். உணர்வு கொந்தளிப்பால் ஆஸ்துமா, குடற்புண் உள்ளிட்ட ஜீரண மண்டல வியாதிகள் ஏற்படும். பயம், நாணம், கோபம் போன்ற உணர்வு அடக்கத்தால் தோல் வியாதி, ரத்த அழுத்தமும், சுரப்பிகளில் பாதிப்பும் ஏற்படுகிறது. பயம், அதிர்ச்சி போன்றவற்றால் முளை நாளங்கள் பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகள் தோன்றலாம். முளையில் ஏற்படும் பலவித நோய்களாலும் மனநோய் உருவாகும். ஜன்னி நோய் ஒரு வித பிதற்ற நிலை மனவியாதியே. மதுபழக்கம், நாளமில்லாச் சுரப்பிகளின் பாதிப்பு இதற்கு காரணமாகும். சிலருக்கு நினைவுகள் அடிக்கடி மாறுவதால் மனக்குழப்பம் ஏற்படலாம். ரத்த ஓட்டம் குறைவு, முளையில் உருவாகும் கட்டியால் நாள்பட்ட முளைபாதிப்பு நோய் ஏற்படலாம். இதனால் மனம் ஆற்றல் இழந்துபோகும். உணர்ச்சி வசப்படுவதால் பலவித வலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. இதை மருந்துகளால் குணபடுத்தலாம்.

ஜன்னி, மனக்குழப்பம், வலிப்பு இவற்றுக்கு மதுபழக்கம் மற்றும் பழக்கவழக்கங்களே முக்கிய காரணம். ஒருவர் நலமாக இருக்க வேண்டுமென்றால் அவரது குழந்தை பருவம் சரியாக அமைந்திருக்க வேண்டும். குழந்தைகள் நோயற்ற நிலையில் சாப்பிட மறுத்தால் மனபாதிப்பாக இருக்கும். கவன ஈர்ப்புக்காக அல்லது, எதிர்ப்புக்காக, பயத்தால் உண்ண மறுத்து அடம் பிடிக்கலாம்.

மிரட்டும் கனவுகளால் தூக்கம் இழப்பது, தூக்கத்தில் சிறுர் கழிப்பது போன்றவற்றுக்கு மன பாதிப்புகளே காரணம். திக்கிபேசுவது மனநோய் இல்லை. ஆனால் அதனால் மனஇறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மனவளர்ச்சி மற்றும் சூழ்நிலைக் குறைபாடுகள் குழந்தைகளின் கற்றல் திறனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பின்னாளில் வேறு மனநோய்களை தோற்றுவிக்கலாம். பொய், களவு, சண்டைக்குச் செல்லுதல், தீ வைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் குழந்தைகள் சமுக விரோதிகளாக வளரும் ஆபத்து உண்டு. இதற்கு காரணம் மனபாதிப்புகளே. இவர்கள் புத்திசாலிகளாகக் காணப்படுவார்கள். ஆனாலும் தாங்கள் விரும்பியதை அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். பாரம்பரியம், சுற்றுச்சூழல், முளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் அவர்கள் பாதிக்கபட காரணமாக அமைகின்றன.

குழந்தை பருவ ஏக்கங்கள், கோபங்கள், பெற்றோரின் கண்டிப்பு ஒருவரை மதுபழக்கத்திற்கு அடிமையாக்கலாம். மது மன நிலையை மாற்றுவதால் மனநோய் தோன்றும். ஒவ்வொரு மனநோயாளிக்கும் மிகவும் தேவையானது ஒரு நண்பனே என்கிறார் உளவியல் நிபுணர் கிளிபோர்டு பியர்ஸ். இக்காலத்தில் மனநோய்களுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. வீரிய மருந்து மாத்திரைகள் மதம் பிடித்தவர்போல் இருக்கும் நோயாளியை கட்டுபடுத்த உதவுகிறது. மின் அதிர்ச்சி முறை மற்றொரு முக்கியமான சிகிச்சையாகும். மருத்துவர்கள் செர்லெட்டி, பினி இருவரும் 1938-ல் இம்முறையை அறி முகபடுத்தினர். அதிக பாதிப்புள்ளவர்களுக்கு முளை அறுவைச் சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதுதவிர பேச்சு வழியில் மனபகுப்பு மருத்துவம், மனோவசிய சிகிச்சை, நடத்தை மாற்று மருத்துவம் போன்றவையும் உள்ளன

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?

1. Boot Sector Viruses:

அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.

2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:

இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.

3. Stealthy Virus:

இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.

4. MultiPartite:

இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.

5. Polymorphic:

பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.

6. Macro

மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்